Tuesday, October 21, 2008

விழிப்பு - கவிதை



நண்பர்களே, தொடர் வேலைப் பளுவின் காரணமாக நாம் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டன.இது வெகுநாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை. பழைய தாள்களைக் கிளறிய போது கிடைத்தது.அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


விழிப்பு

------

மாலை மயங்கும்

மரங்கள் கருக்கும்

சாலை மருங்கில்

சரியும் இருளும்

சோலைக் குயில்களின்

சுரங்கள் ஒடுங்கும்

காலை விடிவெண்ணிக்

கண்கள் உறங்கும்...

உறங்கும் கண்களுக்குள்

உறங்கா நினைவுகள்

இறந்து போயின

எத்தனை கனவுகள்!

திறக்குமோ நாளை

தெரியாத வாசல்கள்?

பறந்த கனவோடு

படுத்துறங்கும் கண்களுமே...

கண்கள் தானுறங்க

கவலைகளும் சேர்ந்துறங்க

மண்ணைப் பிளந்தபடி

மாவிதைகள் கண்விழிக்கும்

விண்ணின் கண்களுமே

விடியல் தான்நோக்கும்

திண்ணம் வாழ்வதினி

திசையெங்கும் சிறகுவிரி!

- ஸ்ரீரசா

No comments: